பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு எதிராக பாட்டியாலா நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இருந்து தப்பிக்கவே, பாஜகவுடன் உறவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்படுத்தியுள்ளார் என, திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளதைக் கொண்டாடும் விதமாக, சென்னை எழும்பூர் தொகுதியில், அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு வழங்கினார்.
மேலும் எளியவர்கள் 500 பேருக்கு பிரியாணி உணவை வழங்கிய அவர், 25-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பரந்தாமன்,
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமித்திருப்பதால், திமுகவினருக்கு புது ரத்தத்தை பாய்ச்சிய உணர்வு ஏற்பட்டுள்ளது என்றார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களின் நீதிபதியாக இருக்க வேண்டுமே தவிர செந்தில் பாலாஜியின் வழக்கறிஞராக இருக்கக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சித்தது தொடர்பாக பரந்தாமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், பாட்டியாலா நீதிமன்றத்தில் அன்புமணி வழக்கை துணிச்சலாக தூசி தட்டி நடத்திய பிறகு, ஐயா ராமதாஸ் இதை பேசட்டும் என்றார்.
அன்புமணிக்கு எதிரான அந்த வழக்கு, விசாரணைக்கே வரக்கூடாது என்பதற்காக பாஜகவுடன் கள்ள உறவை ராமதாஸ் வைத்துள்ளார் என்றும் சாத்தான், வேதம் ஓத வேண்டாம் என்றும் பரந்தாமன் கூறினார்.
விமர்சனங்களை எதிர்கொண்டு தான், திமுக 75 ஆண்டுகளை கடந்து பவள விழாவை கொண்டாடியுள்ளதாகவும் பரந்தாமன் குறிப்பிட்டார்.