நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
உளுந்தூர்ப்பேட்டை அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் வழக்கில் கடந்த 19ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் மந்தைவெளி என்ற இடத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரையும்,அவரது மகன் உதயநிதி ஸ்டாலினையும் ஆபாசமாக பேசியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி திமுக தெற்கு பகுதி செயலாளர் வெங்கடாசலம் அளித்த புகாரின் அடிப்படையில் தன் மீது பல்வேறு பிரிவின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும்,அரசியல் உள் நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு என்றும் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது.அப்போது காவல்துறை தரப்பில் அவருக்கு முன் ஜாமீன் வழங்ககூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, தமிழக முதல்வர் மற்றும் அவரது மகன் குறித்து அவதூறாக பேசியமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, காவல்துறையிடம் முறையான அனுமதி வாங்கி ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து முன்ஜாமீன் வழங்கியுள்ளார். முன்ஜாமீன் நிபந்தனையை நிறைவேற்றியது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.