கோவை ஜி.டி நாயுடு மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உப்புலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் வரை உள்ள சுமார் 10.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டது. கடந்த வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட இந்த மேம்பாலம் பெரிதும் பயனுள்ளதாக இருப்பதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் உப்புலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் நோக்கி அதி வேகமாக சென்ற கார் ஒன்று பாலத்தில் இருந்து இறங்கிய போது, கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்றிருந்த ஈச்சர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணித்த இளம் பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கார் முழுமையாக லாரியின் அடியே சிக்கி அப்பளம் போல் நொறுங்கியதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கோவை பீளமேடு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலைய மீட்பு குழுவினர் பொக்லின் இயந்திரம் மூலம் காரை வெளியே எடுத்தனர். தொடர்ந்து காரில் சிக்கி இருந்த மூன்று பேரின் உடலை சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். மீட்கப்பட்ட மூன்று பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து , விபத்தில் சிக்கியவர்களின் விவரங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இரவு நேரங்களில் புதிதாக திறக்கப்பட்ட ஜிடி நாயுடு மேம்பாலத்தை பயன்படுத்த போலீசார் தடை விதித்து கட்டுப்பாடு போட்டிருந்த நிலையில், சமூக வலைதளங்களில் மேம்பாலத்தை திறக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த கார் விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.