“ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய ஆட்டோக்களை 154 மகளிர்க்கு அமைச்சர்கள் சி.வெ.கணேசன் மற்றும் மா.சுப்பிரமணியன் வழங்கியுள்ளனர்.” ஆட்டோக்களின் முதல் பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்கள் இருவரும் ஆட்டோக்களில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்தனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மா.சுப்பிரமணியன், “பெண்களுக்காக ஒரு பொருளாதாரப் புரட்சியே தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
சென்னை சைதாப்பேட்டை தேரடியில், 154 மகளிர்க்கு தலா ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ கணேசன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு, மகளிர்க்கு ஆட்டோக்களை வழங்கினர்.
ஆட்டோக்களின் முதல் பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்கள் இருவரும் ஆட்டோக்களில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்தனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வெ கணேசன்,” தமிழ்நாட்டுப் பெண்கள் அனைவரது வாழ்வையும் உயர்த்தக் கூடியவராக இருக்கும் முதலமைச்சர் உலகத்திற்கு ரோல் மாடல் என்றார். இந்தாண்டு நிதி நிலை அறிக்கையில் 1000 ஆட்டோக்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அது விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளாா்.அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”தமிழ்நாடு முதல்வர் மகளிர் முன்னேற்றத்திற்காக செய்து கொண்டிருக்கக்கூடிய திட்டங்கள் உலக அளவில் பாராட்டக்கூடிய திட்டங்களாக உள்ளன என்றார். மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் வாழ்வில் மகிழ்ச்சி வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் 700 கோடி பயணங்களை மகளிர் விடியல் பயணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும் பெண்களுக்காக ஒரு பொருளாதாரப் புரட்சியே தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
தமிழ்நாட்டின் சாலைகளில் ஏராளமான மகளிர் பவனி வருவதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முடிந்த வரை நூறு சதவீதத்துக்கு மகளிரே ஆட்டோக்களை ஓட்டும் சக்திகளை பெற வேண்டும் என்றும் அப்போதுதான் பெண்களுக்கு சவால்களை சந்தித்து சாதிக்கும் தலைமைப் பண்பு கிடைக்கும் என்றும் அறிவுறுத்தியுள்ளாா்.