விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் புல்லட் விநாயகர், பாகுபலி விநாயகர்!
புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடக்கிறது. இந்த வருடம் புல்லட்டில் விநாயகரை முருகன் ஓட்டி செல்வது போல், பாகுபலி மாடலில் அம்பு விடுவது போல் என 60 வகையான சிலைகள் புதுவரவாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பேப்பர் கூல், ஜவ்வரிசி கூல் ஆகியவை கலந்து சிலைகள் உருவாக்கபட்டுள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சிலை வைத்து தான் விநாயகர் சதுர்த்தியை வழிபடுவார்கள். எனவே விநாயகர் சிலை தயாரிக்கும் பணி புதுச்சேரி அடுத்த கூனிமுடக்கு கிராமத்தில் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் புல்லட்டில் விநாயகரை முருகன் ஓட்டி செல்வது போல், பாகுபலி மாடலில் அம்பு விடுவது போல் மற்றும் ரததேர் விநாயகர், ஆஞ்சநேயர் மேல் இருக்கும் விநாயகர், நந்திஸ்வர் மேல் இருக்கும் விநாயகர், பால விநாயகர், யானை தலையில் விநாயகர், ரிஷ்ப வாகனத்தில் விநாயகர், மயில் மேல் அமர்ந்து இருக்கும் விநாயகர், புஷ்பத்தில் மேல் விநாயகர் சிலை என 60 வகையான சிலைகள் புதுவரவாக உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், விநாயகர் சிலையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பேப்பர் கூல், ஜவ்வரிசி கூல் ஆகியவை கலந்து சிலைகள் உருவாக்கபடுகிறது. இதையடுத்து பெயிண்ட் அடித்து விநாயகர் சிலைக்கு கண் வைத்து பிறகு அந்த சிலை விற்பனைக்கு வருகிறது. ஒரு சிலை தயாரிக்க சுமார் 10 நாட்கள் ஆகிறது. அரை அடி முதல் 15 அடி உயரமுள்ள சிலைகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலத்திற்கு அனுப்பபடுகிறது.