பண்ருட்டி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- 5 பேர் பலி
பண்ருட்டி அருகே மேல்பட்டாம்பாக்கத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 5 பேர் உயிரிழந்தனர்.
கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து சென்றது. இதேபோன்று பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றிகொண்டு தனியார் பேருந்து எதிரில் வந்தது. இதில் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி மேல்பட்டாம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி வந்த பேருந்து ஓட்டுநர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

எதிரில் தாறுமாறாக வந்த பேருந்து மோதாமல் இருக்க, சாலை ஓரமாக பேருந்தை ஓட்டுநர் ஓட்டிச் சென்றார். இருந்தபோதும் அந்த பேருந்து, எதிரில் வந்த பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, அவ்வழியே சென்றவர்கள் பேருந்தில் இருந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் 86-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், உள்ளிட்ட நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து வந்தனர். தீயணைப்புத் துறை வீரர்களை உதவிக்கு அழைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த வாலிபர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். முதல்கட்ட விசாரணையில் பண்ருட்டியை சேர்ந்த சீனுவாசன் என்பதும், மற்றொருவர் துர்கா பேருந்து ஓட்டுநர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த அங்காளமணி என்பதும் மற்றொருவர் சுகம் பேருந்து நடத்துனர் முருகன் என்பதும் மற்றும் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.