குடும்ப நண்பரான நயினார் நாகேந்திரனை சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கியதாகவும், இந்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசுவது வருத்தமளிப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நடைபெற்ற அதிமுக களஆய்வுக்கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசினார். அதிமுக – பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில் இருவரது சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், குடும்ப நண்பரான நயினார் நாகேந்திரனை சந்தித்ததை அரசியல் சாயம் பூசுவது வருத்தமளிப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு எனது மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு வழங்கினேன்.
அதன்பிறகு எனது குடும்ப நண்பர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை வழங்கினேன். அப்பொழுது, முன்னாள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். சொந்த குடும்ப நிகழ்ச்சிக்காக, குடும்ப நண்பரை சந்தித்த நிகழ்வை, இன்றைய தினமலர் நாளிதழ் அரசியல் சாயம் பூசி செய்தி வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
எம்ஜிஆர், அம்மா ஆகியோரின் வழியில், எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. இந்நிலையில் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கும், எனக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.