
மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்திருந்தால் திமுக இத்தனை இடங்களில் வெற்றி பெற்றிருக்காது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக – பாஜக கூட்டணி நீடித்திருந்தால் தமிழகத்தில் நிறைய இடங்களில் வெற்றிபெற்றிருக்கலாம் என எஸ்.பி.வேலுமணி கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அது யதார்த்தமான உண்மைதான். அதிமுகவோடு கூட்டணி வைத்திருந்தால், திமுகவிற்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்பது உண்மை. பாஜக – அதிமுக கூட்டணி நீடித்திருந்தால், அதிக இடங்களில் வென்றிருப்போம். கூட்டணி என்பது ஓர் அரசியல் வியூகம். அந்த வியூகத்தை அதிமுகவினர், தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் பயன்படுத்தி உள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “2024 தேர்தல் முடிந்து இன்னும் பதவியே ஏற்கவில்லை. இந்த நிலையில் 2026 தேர்தல் கூட்டணி வாய்ப்புகள் குறித்து தற்போது பேச முடியாது. மேலும், அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி நான் கருத்து கூற முடியாது. அண்ணாமலை பேசியது அவருடைய கருத்து, அதுபற்றி அவரிடமே ஊடகங்கள் கேட்கலாம். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அயல்நாட்டு சக்திகள் பணியாற்றியுள்ளன. ஒரு நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க தவறிவிட்டீர்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. சீமான் போன்ற போன்றவர்கள் தேசியத்திற்கு எதிராக உள்ளனர். அவர் பேச்சு இளைஞர்களை தூண்டும் வகையில் உள்ளது. ஆகையால் அவர் போன்றோர் வருவதை ஏற்கவில்லை,. இது எனது தனிப்பட்ட கருத்து.”என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மேலும், சமூக வலைதளங்களில் தனது தோற்றம் குறித்து பதிவுகளுக்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை, ஸ்டாலின் போன்றோருக்கு தெரிவித்துக்கொள்கிறேன், உங்கள் இணையதள வாசிகளை ( ஐ.டி. விங்க்) அடக்கி வையுங்கள் என்று எச்சரித்தார். மேலும் தன்னை பரட்டை என்று இணையவாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக கூறிய அவர், தனக்கு பரட்டை என்றாலும் அது ஒரிஜினல் எனக்கூறி முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்துள்ளார். அத்துடன் எதிர்க்கட்சி இணையவாசிகளை எச்சரிப்பது போல் உட்கட்சி( பாஜக) இணையவாசிகள் மற்றும் வார் ரூம் உறுப்பினர்களையும் எச்சரிப்பதாக தமிழிசை தெரிவித்தார்.