வீடு இடிந்து விழுந்து தாய், மகன் பலி
ஈரோட்டில் கனமழையின் காரணமாக பழமையான வீடு ஒன்று இடிந்து விழுந்ததில், தாய், மகன் இடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். அங்குள்ள பேக்கரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இரவில் மழை பெய்த்தால் வீடு திரும்ப முடியாமல், கடையிலேயே அவர் தங்கி விட்டார். இந்நிலையில், வீட்டில் அவரது மனைவி
சாரம்மா(34), மகன் முகமது ஹஸ்தக் (12) இருவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, இன்று அதிகாலை வீட்டின் மேற்கூரை கட்டுமானம் இடிந்து விழுந்தது. கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த ஈரோடு தீயணைப்புத்துறை, கருங்கல்பாளையம் போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மிக பழைய கட்டிடம் மழையின் காரணமாக சேதமடைந்து இடிந்து விழுந்ததாக தெரிவித்த அப்பகுதி மக்கள், மேலும், இதை போலவே இன்னும் பல கட்டிடங்கள் இருப்பதால் அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.