“உலகம் உங்கள் கையில்” எனும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில், மாணவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்துள்ளனர்.
உலகம் உங்கள் கையில் நிகழ்ச்சியில் மாணவி எழுப்பிய கேள்விக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,“அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சிதான் திராவிட மாடல் அரசின் நோக்கம். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களும் தொழில்வளர்ச்சி கண்டு வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞரால் கடந்த 2000 ஆம் ஆண்டிலேயே டைடல்பார்க் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் நியோ டைடல் பார்க் உருவாக்கப்பட்டுள்ளது. வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நியோ டைடல் பார்க் உருவாக்கப்பட்டுள்ளது,” என பதிலளித்தார்.
தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு, “உலகம் டிஜிட்டல் மயமாகி வந்தாலும், நமது பண்பாடு, கலாச்சாரம் மற்றும் மொழியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தற்கால தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நம் வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கும் கற்பிப்பது நம் கடமை. தொழில்நுட்பங்களை பயன்படுத்திதான் கீழடி, பொருநை அருங்காட்சியகங்களை நாம் உருவாக்கியுள்ளோம். கீழடி, பொருநையை நேரடியாக சென்று பார்க்க வேண்டும். கீழடி, பொருநை ஆகியவற்றின் மூலம் பண்டைய கலாச்சாரத்தை அறிந்துகொள்ளலாம்,” என்று கூறினார்.

இதையடுத்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ” Al மூலம் வேலைவாய்ப்புத் தன்மை மாறும் சூழல் உருவாகியுள்ளது. நூறு பேர் செய்யும் வேலையை Al சில நிமிடங்களில் முடித்துவிடும். AI மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.” எனவும் தெரிவித்தார்.
இந்த விழாவில், நடிகர் விஜய் சேதுபதி , “கல்வி என்பது எவ்வளவு அவசியமான ஒன்று என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கல்வி ஒருவருக்கு கிடைப்பதால் அந்த குடும்பமே அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து செல்கிறது. மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றிகள்.” என்று தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மணிகண்டன், “முத்தான, சத்தான திட்டங்கள் மூலம் பல திறமையாளர்களை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. குறிப்பாக கிராமப்புற, பழங்குடியின மாணவர்களுக்கு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி அவர்களது முன்னேற்றத்திற்கு வழிவகுத்து வருகிறது பள்ளிக்கல்வித்துறை. அறிவை, கல்வியை மூலதனமாக கொண்டு இந்த திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இன்று போடப்படும் விதை எங்கு கொண்டு செல்லப்போகிறது என்பதை இனிவரும் காலங்களில் நாம் பார்க்கப்போகிறோம்.” என்று கூறினார்.
ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்…சாமானிய மக்கள் அதிர்ச்சி…


