வேங்கைவயல் விவகாரம்- 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதியின் படி குழந்தைகள் நலக்குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இறையூர் மற்றும் வேங்கைவயலைச் சேர்ந்த நான்கு சிறுவர்களுக்கும் இன்று டிஎன்ஏ பரிசோதனைக்கான இரத்த மாதிரி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பில் உள்ள பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று இன்றுடன் 208 நாட்கள் ஆகிறது.இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் இதுவரை கண்டறியப்படாத நிலையில் குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடி போலீசார் 188 வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரையில் 158 பேரிடம் சிபிசிஐடி போலீசார் சாட்சியங்களை பெற்றுள்ள நிலையில் அறிவியல் பூர்வமான சாட்சியங்களை கண்டறிந்து குற்றவாளிகளை பிடிக்கும் நோக்கோடு வேங்கைவயல் இறையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 119 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டனர்.
அதன் அடிப்படையில் ஏற்கனவே 21 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுமென கடந்த பத்தாம் தேதி சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அது குறித்த விசாரணை மேற்கொண்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் நான்கு சிறுவர்களின் பெற்றோர்களின் கருத்துக்களையும் கேட்டு குழந்தைகள் நல குழு வழிகாட்டுதலோடு இன்று நான்கு சிறுவர்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனைக்கான இரத்த மாதிரிகளை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ள அனுமதி வழங்கியது.
இந்நிலையில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் இன்று இறையூர் கிராமத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் மற்றும் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன் என நான்கு சிறுவர்களுக்கும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சட்டம் சார்ந்த மருத்துவ பிரிவில் மருத்துவர்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கான இரத்த மாதிரியை சேகரித்தனர்.நான்கு சிறுவர்களையும் குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் வெள்ளனூர் காவல் நிலைய குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆகியோரின் மேற்பார்வையில் சிபிசிஐடி போலீசார் சட்டம் சார்ந்த மருத்துவர்கள் முன்பு அழைத்துச் சென்று சிறுவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட நான்கு சிறுவர்களுக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. மேலும் இன்று சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட உள்ளது.