சென்னை அரசுப்பள்ளியில் மூடநம்பிக்கையை பரப்பும் விதமாக பேசியவிவகாரத்தில் ஆஸ்திரேலியாவிருந்து சென்னை திரும்பிய மகா விஷ்ணுவை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அசோக்நகா் அரசுப் பள்ளியில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பேச்சாளா் மகா விஷ்ணு , மாற்றுத் திறனாளிகள் குறித்து மூட நம்பிக்கையை பரப்பும் விதமாக பேசினார். அதனை எதிர்த்து பேசிய மாற்றுத் திறனாளி தமிழாசிரியா் சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மகா விஷ்ணுவின் செயலுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், அரசியல் கட்சி தலைவரகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சொற்பொழிவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 2 தலைமை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மகா விஷ்ணு மீது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவா் வில்சன், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் சைதாப்பேட்டை உதவி ஆணையர் சீனுவாசன் தலைமையில் காவல்துறையினர் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகா விஷ்ணுவை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.