தமிழகத்தில் பின்தங்கிய மக்களின் நிலை பற்றி உண்மையான விவரத்தை அறிந்து கொள்ள தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்.சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் தமிழக மக்களின் கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பு வசதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் தெரியவரும். சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதன் மூலமாக தமிழக அரசு மக்கள் நலத் திட்டங்களை தீட்டி தமிழ்நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு வரலாம். மத்திய அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது பாமகவிற்கு கிடைத்த வெற்றி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
சென்னை கோவிலம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை திறந்து வைத்த பின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, ” மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்போம் என அறிவித்துள்ளது. இதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. இதனை, எங்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தி, ஆயிரக்கணக்கான கடிதங்கள், சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

எங்கள் ஐயா ராமதாஸ் ராஜீவ் காந்தி தொடங்கி வாஜ்பாய், மன்மோகன் சிங், பிரதமர் மோடி வரை பலமுறை பிரதமர்களை சந்தித்து சாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கு காங்கிரசும், திமுகவும் சொந்தம் கொண்டாடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆட்சி அதிகாரம் இருந்தபோது திமுக,காங்கிரஸ் இதனை செய்யவில்லை.
சுதந்திர இந்தியாவில் பிரதமர் மோடி அவர்களின் அரசு மட்டும் தான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். சாதிவாரிய கணக்கெடுப்பு வேரு சாதி கணக்கெடுப்பு வேரு. கேஸ்ட் சர்வே தமிழக அரசுதான் எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதி கணக்கெடுப்பு அவசியம். உலகத்தில் மொத்தம் 377 சமூகங்கள் இட ஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள். இதில் எந்தெந்த சமுதாயங்கள் அதிக இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறார்கள் எந்தந்த சமுதாயங்கள் இன்னும் இட ஒதுக்கீடு முழுமையாக அனுபவிக்காமல் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள சர்வே அவசியம்..
உதாரணத்திற்கு மலை குறவர்களிடம் வீடு உள்ளதா ?அவர்களில் எத்தனை பேர் படித்திருக்கிறார்கள் ? அவர்களின் பொருளாதார நிலை எப்படி உள்ளது.. மீனவர்களிடம் எத்தனை படகுகள் உள்ளது? அவர்களில் படித்தவர்கள் எத்தனை பேர் அவர்களின் வாழ்வாதார நிலை எப்படி உள்ளது இவற்றையெல்லாம் அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப தமிழக அரசு திட்டங்களை தீட்ட முடியும்.. அதற்கு கேஸ்ட் சர்வே அவசியம் அதனை தமிழக அரசு தான் எடுக்க வேண்டும்.
மத்திய அரசு மேக்ரோ லெவலில் எடுக்கும் மாநில அரசு தான் மைக்ரோ லெவலில் எடுக்க வேண்டும். தலையை எண்ணும் வேலையை மட்டும் தான் மத்திய அரசு செய்யும். நாடார்கள் இத்தனை பேர் இருக்கிறார்கள். வன்னியர்கள் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைத்தான் மத்திய அரசு செய்யும் அதே நேரத்தில் அவர்களின் கல்வி நிலை, பொருளாதார நிலை ,வாழ்வியல் நிலை எப்படி உள்ளது என்பதை அறிய தமிழக அரசு தான் சர்வே எடுக்க வேண்டும்.
பொதுவாக சாதி வாரி கணக்கெடுப்பின்போது 5 கேள்விகள் மட்டும் தான் கேட்பார்கள். ஆனால் தமிழக அரசு, தெலுங்கானாவை போல 75 வகையான கேள்விகளை கேட்டு மக்களின் வாழ்வியல் பொருளாதாரம் நிலைகளை ‘கேஸ்ட் சர்வே’ மூலம் அறிந்து கொள்ள முடியும். இதற்கு மேலும் தமிழக முதலமைச்சர் எங்களுக்கு அதிகாரம் இல்லை என பொய் சொல்லக்கூடாது. ‘இந்திய புள்ளியல் விவர சட்டம்’ மாநில அரசு கணக்கெடுப்பு நடத்த முழு அதிகாரத்தை கொடுத்துள்ளது. அதன் மூலம் எடுக்கப்படும் கணக்கெடுப்பை எந்த நீதிமன்றமும் ரத்து செய்ய முடியாது என அன்புமணி ஆவேசமாக பேசியுள்ளாா்.
தமிழகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பிசி, முஸ்லிம், அருந்ததியர்,வன்னியர் உள்ளிட்ட எவருக்கு கொடுத்த இட ஒதுக்கீட்டுக்கும் தரவுகள் கிடையாது. அதே நேரத்தில் ஜனார்த்தனன் கமிஷன் வன்னியர்களுக்கு 13 சதவீதம் உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று சொன்னால் அதை மட்டும் தமிழக அரசு ஏற்க மறுக்கிறது. பட்டியலின மக்களும் வன்னியர்களும் அதிகம் வாழும் வட மாவட்டங்களில் 15 மாவட்டங்கள் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ளது. கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் கடைசி இடத்தில் உள்ளது ஆனால் டாஸ்மாக் விற்பனைகள் மட்டும் இந்த மாவட்டங்கள் முதல் இடத்தில் உள்ளது.
இந்த வட மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் நிலை அறிந்து கொள்ளவும் சர்வே அவசியம். அதனை தமிழக அரசுதான் எடுக்க வேண்டும். அப்போதுதான் அதற்கேற்ப மக்கள் நலத் திட்டங்களை கொடுக்க முடியும். தமிழக அரசுக்கு உண்மையிலேயே சமூகநீதி அக்கறை இருந்தால் பட்டியல் இன மக்கள் உட்பட அனைத்து மக்களும் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள கேஸ்ட் சர்வே எடுக்க வேண்டும்.
மாநில அரசுகளே எடுத்துக் கொண்டால் குளறுபடிகள் ஏற்படும் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் அப்படி மட்டும் கூறவில்லை சில மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு சிறப்பாக எடுத்திரக்கிறார்கள் சில மாநிலங்கள் சரியாக எடுக்கவில்லை என்றும் கூறி உள்ளார்.