“சென்னை துறைமுகத்தில் முழு நேர அப்ரண்டீஸ் பயிற்சி முடித்து கடந்த 30 ஆண்டுகளாக வேலைக்காக காத்துக்கிடந்த 14 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்”
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சென்னை துறைமுக முழு நேர பயிற்சி பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போழுது, சென்னை துறைமுகத்தில் கடந்த 1990 முதல் 1994 வரை 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு மெக்கானிக்கல் அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது, தொடர்ந்து இவர்கள் அங்கேயே 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணி ஆணை கிடைக்காமல் சொற்ப ஊதியத்தில் வேலை செய்து வருவதாகவும் நாளை பணியில் அமர்த்திவிடுகிறோம், விரைவில் பணியில் அமர்த்தி விடுகிறோம் என்று 30 ஆண்டுகளாகியும் தற்போது வரை பணியமர்த்தப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் சென்னை துறைமுகத்தில் முழு நேர பயிற்சி முடித்து பணி ஆணை கிடைத்து விடும் என்று 30 ஆண்டுகளாக காத்துக் கிடந்த 14 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.
அது மட்டும் இல்லாமல் கடந்த 1995 லிருந்து சென்னை துறைமுக நிர்வாகத்தால் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பிரிவில் சேர்க்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்டதற்கு தகவலை தர சென்னை துறைமுக நிர்வாகம் மறுப்பதாகவும் இதன் மூலம் பணிக்கு ஆட்களை சேர்ப்பதில் ஊழல் முறைகேடு நடந்திருக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பணி வழங்காமல் இருக்கும் ஒன்றிய அரசை கண்டிப்பதாகவும், ஒன்றிய அரசு தொடர்ந்து தொழிலாளர்களை வஞ்சித்து வருவதாகவும், அம்பானிக்கும் அதானிக்கும் துறைமுகத்தை கொடுத்துவிடலாம் என்று தான் செயல்பட்டு வருகிறது. காண்ட்ராக்ட் நிறுவனங்கள் தான் தொடர்ந்து கொள்ளை அடித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்த அவர்கள் எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்றால் சென்னை துறைமுகத்தை முற்றுகையிட்டு சாகும் வரை மறியல் போராட்டத்தை நாங்கள் விரைவில் நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளனர்.