எம்.ஜிஆர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தனது மதம் திராவிடம், தனது புனித நூல் திருக்குறள் என சொல்லி புரட்சி செய்தவர். இதனை அதிமுகவினர் புரிந்துகொள்ள வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- மதுரை முருக பக்தர்கள் மாநாடு, பக்தி மாநாடு என்று சொல்லப்பட்டது. ஆனால் பாலிடிக்ஸ் மாநாடாக மாறிவிட்டது. மதுரையில் அரசு சார்பில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் அறிஞர்கள் கலந்துகொண்டு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அதில் கொஞ்சம் அரசியல் இருக்கும். ஆனால் மதுரையில் நடைபெற்றது முருகன் மாநாடு என்று சொல்லப்பட்டாலும் அது பாஜக மாநாடுதான். அதற்கு காரணம் பாஜகவின் அமைப்புகளில் ஒன்றான இந்து முன்னணி. இந்த மாநாட்டை தொடர்ந்து, அனுமன் மாநாட்டை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பாமக வலுவிழந்து உள்ள வன்னியர் பகுதிகளில் நடத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாஜகவின் பிராண்ட் பாலிடிக்ஸ் என்பது இதுதான். இது யாருக்கான எச்சரிக்கை என்றால் பாஜக உடன் கூட்டணியில் இருக்கும் அதிமுகவுக்கான எச்சரிக்கையாகும்.
உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகன் என்று பவன் கல்யாண் சொல்கிறார். அவருக்கு வரலாறு தெரியவில்லை. 1981 மக்கள் தொகை கண்க்கெடுப்பின்போது எம்ஜிஆர், தனது மதம் திராவிட மதம் என்று சொல்கிறார். எனது புனித நூல் திருக்குறள் என்று எழுதுகிறார். அப்போது முதல் புரட்சித்தலைவர் முருகன் என்று சொல்கிற பவன் கல்யாண் இந்த வரலாறையும் சேர்த்து சொல்ல வேண்டும். அதிமுக இந்த வரலாறை புரிந்துகொள்ள வேண்டும். அதிமுகவினர் எம்ஜிஆரை மறைந்த புரட்சி தலைவர் என்று பேசுகிறார்கள். அவர் மத அரசியலை எதிர்த்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றது என்பது அவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கையில் இருந்து விலகுகிறார்கள் என்று தான் அர்த்தம். எம்ஜிஆர் – ஜெயலலிதா ஆகியோர் முருகன் – வள்ளியாக நடித்த படங்களை இணையத்தில் பார்க்கலாம். ஆன்மீக வழிபாட்டில் சில வழிபாடுகள் மதம் சார்ந்தது அல்ல. சித்தர் வழிபாடு போன்ற பகுத்தறிவு கருத்துக்கள், இந்த மண்ணில் காலங்காலமாக இருந்து வருகின்றன. அது திமுகவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டை யூத இனத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார். அந்த ஒப்பீடு சரியானது கிடையாது. அவர் நயினார் நாகேந்திரனை விட தான் பெரியவன் என்பதை காண்பிக்க இதுபோன்று பேசியுள்ளார். அதேபோல், நயினாரும், அண்ணாமலையை விட தான் பெரியவன் என்று காட்ட விரும்புகின்றனர். இந்த மாநாட்டிற்கு பவன் கல்யாணை அழைத்து வந்ததை, அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்கள் விரும்பவில்லை என்கிறார்கள்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மட்டும் 10 சதவீத வாக்குகள் உள்ளன. பாஜக உடன் அதிமுக மட்டும் தான் கூட்டணியில் உள்ளது. வேறு யாரும் வரவில்லை. அப்போது பாஜகவுக்கு 90 சதவீதம் எதிர்ப்பு வாக்குகள் உள்ளன. தற்போது முருக பக்தர்கள் மாநாட்டை நடத்துவதன் அந்த 90 சதவீத எதிர்ப்பு வாக்குகளை யார்? பக்கம் திருப்பி விடுகிறார்கள். இந்த வாக்குகள் பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்கு போகும். இன்றைய கால கட்டத்தில் பாஜகவுக்கு எதிராக அரசியல் களத்தில் உள்ள விஜய் மட்டும்தான். அதிமுக ஜோதியில் கலந்துவிட்டது. மீட்பு கிடையாது. கடைசி நேரத்தில் எடப்பாடி கூட்டணியில் இருந்து வெளியேறி விடுவாரோ என்று சந்தேகம் இருந்து வந்தது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. ஏனென்றால் சேலம் நிகழ்ச்சியில் வேலை கையில் வாங்குகிறார். அந்த நிகழ்ச்சியில் முருகன், மாநாடு குறித்து பேசுகிறார். மதுரை மாநாட்டில் பங்கேற்க அதிமுக மூத்த அமைச்சர்களை அனுப்பி வைத்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி இனி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டார் என்று தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போது அதிமுக – பாஜக கூட்டணிக்கு விஜய் போக முடியாது.
தென் தமிழ்நாட்டில் முருகன் மாநாட்டிற்கு பிறகு பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதை வைத்து 30 சீட்டுகள் வரை அதிமுகவிடம் கேட்டால், அவர்கள் தொகுதிகளை எப்படி பங்கிடுவார்கள். பாஜகவுக்கு தென் தமிழகத்தில் வாக்கு வங்கி அதிகம் உள்ளது. எனவே அங்கு 25 தொகுதிகளை ஒதுக்கும். இப்படி செய்தால் ஓபிஎஸ், தினகரனுக்கு தான் நஷ்டமாகும். ஏனென்றால் அவர்கள் இல்லாமல் தனியாக தான் பாஜக மாநாட்டை நடத்தியுள்ளது. நானும் வேலை வாங்கியுள்ளேன். மதுரை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இனி எதற்கு ஓபிஎஸ், தினகரன்? என்று பாஜக தலைமையை பேசி சமாதானப்படுத்துவார். இதன் மூலம் எடப்பாடியின் உட்கட்சி எதிரிகள் மீண்டும் கூட்டணிக்குள் வராமல் இருப்பார்கள். ஆனால் பாஜவுக்கு இது நஷ்டமாகும். ஏனென்றால் பாஜக எதிர்ப்பு வாக்கு வங்கி கொஞ்சமாவது விஜய்க்கு போயிருக்கும். தற்போது முழுக்க முழுக்க திமுக பக்கம் சென்றுவிடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.