
தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. ஒருபுறம் இலங்கை கடற்படை என்றால், மற்றொரு புறம் இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்துவது போன்ற அட்டூழியங்களை செய்து வருகின்றனர். மீனவர்கள் தாக்கப்படுவதையும், சிறைபிடிக்கப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும் மீனவர்களுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் தொடர்கதையாகி வருகின்றன. இந்நிலையில் இன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 35 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், “தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை அளிக்கிறது.
கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும். இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


