சென்னையில் லாரியை முந்தி செல்ல முயன்ற போது திமுக நிர்வாகி உயிரிழந்தாா். அவரது நண்பர் படுகாயம் அடைந்துள்ளாா்.
சென்னை சூளைமேடு, பாரதியார் தெருவை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன் கட்டிட காண்டிராக்டர் இவரது மகன் கோபால் என்கிற மோகனகிருஷ்ணன் (வயது32) கால் டாக்சி ஓட்டி வந்தார். திமுக 106-வது வட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும் இருந்தார்.
இவர் நேற்று இரவு 11 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த நண்பர் கேசவன் என்பவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வடபழனி நோக்கி சென்றார். திருநகர் பஸ் நிறுத்தம் அருகே நூறடி சாலையில் வந்தபோது அவ்வழியே இரும்பு பிளேட் லோடுடன் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை மோகனகிருஷ்ணன் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தனர். இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிக் கொண்ட மோகனகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் தொடை நசுங்கி பலத்த காயமடைந்த கேசவனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லாரி டிரைவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் (வயது48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


