உலக அளவில் மிக அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமான ஓசூரில், சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசும், அண்டை மாநிலமான கர்நாடக அரசும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவது, இப்பகுதி தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முந்தைய தமிழக அரசு, ஓசூரில் சர்வதேச தரத்திலான விமான நிலையம் கொண்டு வருவதற்கான பல்வேறு பூர்வாங்க முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டது. ஆனால், “ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் (150 கி.மீ சுற்றளவு விதிமுறை) புதிய விமான நிலையத்திற்கு அனுமதி தர இயலாது” எனக் கூறி மத்திய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது. ஆனால், அதே விதியின் கீழ் வரும் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளுக்கு, புதிய விமான நிலையங்களை அமைப்பதற்கான முயற்சிகள் அரங்கேறி வருகின்றன. அதற்கு மத்திய அரசு எந்தவித தடையுமின்றி அனுமதி அளிக்க முன்வருவது ஏன் என்றும், தமிழகத்திற்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்றும் ஓசூர் பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


நில இழப்பீட்டில் அதிருப்தி – விவசாயிகள் தயக்கம்
இத்திட்டத்திற்காக நிலம் கொடுக்க ஓசூர் பகுதி விவசாயிகள் தயாராக இருந்தாலும், மத்திய அரசு வழங்கும் நிதி மற்றும் இழப்பீட்டுத் தொகையில் பெரும் சுணக்கம் நிலவுகிறது. கர்நாடகாவில் நிலம் கையகப்படுத்தும் விவசாயிகளுக்குக் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படும் நிலையில், தமிழக விவசாயிகளுக்கு மிகக் குறைந்தபட்ச அளவிலேயே நிதி ஒதுக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிதிப் பாரபட்சம் காரணமாகவே, விவசாயிகள் தங்களது வாழ்வாதார நிலங்களை வழங்கத் தயக்கம் காட்டி வருகின்றனர்.
புதிய தமிழக அரசுக்குக் கோரிக்கை
“தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக ஓசூரின் வளர்ச்சிக்கு விமான நிலையம் மிக அத்தியாவசியமானது. எனவே, தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு (தவெக அரசு), இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசுக்கு உரிய அரசியல் அழுத்தங்களைத் தந்து, விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்கி, ஓசூர் விமான நிலையத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அப்பகுதி மக்கள் மற்றும் தொழில் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
