தமிழகத்திற்கு ஜூன் மாதம் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா தரவில்லை- துரைமுருகன்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ தமிழகத்திற்கு ஜூன் மாதம் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா தரவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும். நமக்கான உரிமையை நாம் கேட்கிறோம். ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் 2.83 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது. ஜூன் மாதத்திற்குரிய தண்ணீரை வழங்காததால் 6.357 டி.எம்.சி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

தடுப்பணை விவகாரத்தில் தமிழக அரசுடன், கர்நாடகா அரசு பேசினால் வரவேற்போம். மேகதாது அணை ஏன் கூடாது என்பதை காரணத்தோடு கர்நாடகாவிடம் விளக்குவோம். கர்நாடகாவின் முயற்சி முறியடிக்கப்படும்.
மேகதாது நடுவே அணை கட்டுவது தொடர்பாக யாரிடமும் கேட்கத் தேவையில்லை. CAUVERY WATER MANAGAEMENT தான் பொறுப்பு நாங்கள் இன்று செல்வது தமிழகத்திற்கு இன்னும் கூடுதலாக நீர் வேண்டும் எனக் கேட்டு உள்ளோம். கூடுதலாக திறக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். ஒன்றிய ஜல்சக்தி அமைச்சரையும் பார்க்க உள்ளேன். மேகதாது விவகாரம் என்று ஒன்று இல்லை.

பத்திரிகைகள் தான் குழப்பிக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மேகதாது என்கிற ஒரு வார்த்தை கிடையாது. மேகதாது என்பது எங்கு கட்டப்படுகிறது என்றால் கே.ஆர்.சாகரிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது அதேபோன்று கபினியில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது, அது இரண்டும் கொட்டுகிற இடத்தில் தண்ணீர் புறப்பட்டு வருகிறது. தண்ணி கொட்டும் அந்த இடம் தமிழ்நாட்டுக்கு சொந்தம். அங்கு கட்டுவதாக கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள இடம் அங்கு அவர்கள் அணை கட்ட முடியாது” என்றார்.
