பாம்பை பிடித்து வீடியோ பதிவு செய்து வெளியிட்ட இருவர் கைது
கோவையில் உரிய அனுமதியின்றி பாம்பை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பெண் உட்பட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் மற்றும் சின்னவேடம் பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரி ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய எலிப் பாம்பு (Indian Rat Snake ) ஒன்றை பிடித்து அதை வைத்து வீடியோ பதிவு செய்துள்ளனர்.
அதில் பாம்பை கண்டால் பொதுமக்கள் அடித்துக் கொள்ளக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி அனுமதியின்றி பாம்புகளை பிடிக்கக் கூடாது.
அந்த அடிப்படையில் அனுமதியின்றி பாம்பை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட அப்துல் ரகுமான் மற்றும் உமா மகேஸ்வரி ஆகிய இருவர் மீதும் கோவை வனச்சரக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
மேலும் இதே போல் பொதுமக்கள் யாரும் உரிய அனுமதியின்றி பாம்பு மற்றும் வன விலங்குகளை பிடிப்பதோ அதனை வீடியோ பதிவு செய்வதோ கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.