புதுச்சேரியில் டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளதாக மிரட்டி, அரசு ஊழியரிடம் ரூ.73 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சென்னை வாலிபர் கைது.
புதுச்சேரியை சேர்ந்த பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியரை, கடந்த ஜூலை மாதம் மர்ம நபர் ஒருவர், மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளாா். அவர், தான் சி.பி.ஐ., அதிகாரி என்று கூறியுள்ளாா். மேலும், தங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கு துவங்கியுள்ளதாகவும் அதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடி நடத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். அதனால் தாங்கள் டிஜிட்டல் அரஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக மர்ம நபர் தெரிவித்துள்ளாா்.

மேலும், அந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு ரூ.73 லட்சம் அனுப்ப வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதனையடுத்து, மர்ம நபரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.73 லட்சத்தை அனுப்பியுள்ளாா். பின்னர் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்த ஓய்வு பெற்ற ஊழியர் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளாா்.
அந்த புகாரின் பேரில், சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன், எஸ்.பி., ஸ்ருதி யாரகட்டி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், அரசு ஊழியர் அனுப்பிய பணத்தில் ரூ.10 லட்சம் திருவள்ளுவர் மாவட்டம், மதரபாக்கத்தை சேர்ந்த பீரகா சிட்டிபாபு மகன் பீரகா வம்சி, 32 என்பவரின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அடையாளம் தெரியாத நபர் வாட்ஸ்- ஆப் மூலம் பீரகா வம்சியை தொடர்பு கொண்டு வங்கி கணக்கு துவங்கி கொடுத்தால், அதற்கு கமிஷன் தருவதாக கூறியுள்ளாா். இதனால் தன்னுடைய பெயரிலும், தனது மனைவியின் பெயரிலும் இரண்டு வங்கி கணக்குகளை துவங்கி கொடுத்துள்ளாா் பீரகா வம்சி. அதற்காக தலா ஒரு வங்கி கணக்கிற்கு ரூ.15 ஆயிரம் வீதம் 30 ஆயிரத்தை கமிஷனாகப் பெற்றதாகவும் தெரிவித்தார்.
அந்த 2 வங்கி கணக்குகளை ஆய்வு செய்தபோது, அதில் ஒரு கோடிக்கு மேல் பண பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த வங்கி கணக்குகள் மீது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புகார்கள் உள்ளதுள்ளன என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, பீரகா வம்சியிடம் இருந்த மொபைல், சிம் கார்டு, ஏ.டி.எம். கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின், புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பீரகா வம்சி கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
குழந்தை கடத்தல் வழக்கு – சரித்திர பதிவேடு ரவுடி உட்பட நான்கு பேர் கைது…


