‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்பது நம் பாட்டி – தாத்தா காலத்து பழமொழி. இது பழமொழி மாதிரி இருந்தாலும் இது ஒரு சுகாதார ரகசியம் என்றே சொல்லலாம். ஏனென்றால் உணவை நன்றாக மென்று சுவைத்து சாப்பிடும்போது செரிமானம் சீராகும், சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும், உடல் எடை குறையும், இதனால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
உணவை மெதுவாக, நன்றாக, நொறுக்கி சாப்பிடும் போது வாயில் உள்ள உமிழ்நீரில் உணவானது கலந்து நன்றாக செரிமானம் ஆகும். இதனால் வயிற்றில் சுமை குறையும். அஜீரணம், வாயு, புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

மெதுவாக மென்று சாப்பிடும்போது உடலானது இன்சுலின் சுரப்பை சமநிலைப்படுத்தி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் குறையும்.
இது தவிர உணவை நன்கு மென்று சாப்பிடுவதன் மூலம் பற்களுக்கு இயற்கையாகவே பயிற்சி கிடைக்கும். இதனால் பல் வலி, ஈறுகளில் பிரச்சனை, தாடை தளர்வு போன்ற எந்த பிரச்சனையும் ஏற்படாது.
எனவே ஒவ்வொரு முறையும் உணவை குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் வரை நன்கு மென்று சாப்பிடுவது நல்லது. அதேபோல் உணவை சாப்பிடும்போது மொபைல் – டிவி பார்ப்பது, பேசிக்கொண்டே சாப்பிடுவது ஆகியவற்றை தவிர்ப்பதும் நல்லது. எனவே நீங்களும் நொறுங்கத் தின்று நூறு வயது வரை வாழுங்கள்.


