தமிழ்நாட்டு மீனவர்கள் 8 பேரை இன்று (09.08.2025) இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர் இது கண்டனத்திற்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், தனது வலைத்தளப்பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது, ”கடந்த 6 ஆம் தேதி கற்பிட்டி பகுதியில் விசைப்படகு மீனவர்கள் 10 பேரும், கச்சத்தீவு அருகே நாட்டுப்படகு மீனவர்கள் 4 பேரும் படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்கள் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களின் இந்த அராஜக போக்குக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதுவரையில் எந்த முடிவும் எட்டவில்லை.
மேலும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் கடிதம் எழுதியும், நேரில் சென்று கோரிக்கை வைத்தும் உறுதியான, நிலையான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால் இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நிகழ்ந்திருக்காது. கடந்த மே மாதம் பிரதமர் மோடி அவர்கள் இலங்கை சென்ற போது, மீனவர்கள் பிரச்சனையின் முக்கிய அம்சங்கள் குறித்து இருதரப்பும் விரிவாக ஆலோசனை செய்ததாகக் கூறப்பட்டது. அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்து இருநாட்டு மீனவர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், மீனவர்களின் உரிமையை பாதுகாக்க கடல் உரிமைச்சட்டம் கொண்டு வந்து மீனவர்களின் பாதுகாப்பை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.
ஐசிஐசிஐ பேங்க் கொடுத்த அதிர்ச்சி! சோகத்தில் வங்கி வாடிக்கையாளர்கள்!
