மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 9 மாதங்களாகியும் இழப்பீடு வழங்காமல் உணவு படைக்கும் கடவுள்களான விவசாயிகளின் வாழ்வில் திமுக அரசு விளையாடக்கூடாது என அன்புமணி தெரிவித்துள்ளாா்.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”காவிரி பாசன மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையில் சேதமடைந்த ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெற்பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு வழங்கப்படவில்லை. உழவர்கள் கடன் வாங்கி விளைவித்த பயிர்கள் சேதமடைந்த நிலையில், அவற்றுக்கான இழப்பீட்டைக் கூட வழங்க திமுக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது 40 ஆயிரத்துக்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன. அதைத் தொடர்ந்து நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பருவம் தவறி பெய்த மழையில் ஒரு லட்சத்து பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்போதே நான் வலியுறுத்தியிருந்தேன். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்களும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தனர்.
ஆனால், தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் ஒரு கட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நான் வந்துள்ள நிலையில், என்னை சந்தித்த விவசாயிகள் சங்கத் தலைவர்கள், நெற்பயிர்கள் பாதிகப்பட்டு 9 மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை தங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர். இந்தத் தகவல் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு 9 மாதங்களுக்கு மேலாகியும் இழப்பீடு வழங்க ஆட்சியாளர்கள் மறுப்பது மனிதநேயமற்ற செயல் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள் மொத்தம் 1.05 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றுக்கு ரூ.71.79 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதுவே போதுமானது அல்ல. மொத்தம் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால், அதில் மூன்றில் இரு பங்கு, அதாவது ஒரு லட்சத்து 5 ஏக்கர் பரப்பளவிலான பயிர்களுக்கு மட்டும் தான் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு குறைந்தது ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரியிருந்த நிலையில், ஏக்கருக்கு வெறும் ரூ.6800 மட்டும் தான் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மிகவும் சபிக்கப்பட்ட சமூகம் விவசாயிகள் தான், மழை பெய்தாலும், வறட்சி ஏற்பட்டாலும் அதனால் பாதிக்கப்படுவது அவர்கள் தான். இடர்க்காலங்களில் அவர்களை தாங்கிப் பிடிக்க வேண்டிய அரசு, கீழே தள்ளி மிதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டை, அதுவும் அரைகுறையாக அறிவித்த இழப்பீட்டைக் கூட ஒன்பது மாதங்களாக வழங்காமல் இழுத்தடிப்பது தான் திராவிட மாடல் அரசின் கொள்கையா? என்பதை ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.
உணவு படைக்கும் கடவுள்களான விவசாயிகளின் வாழ்வில் திமுக அரசு விளையாடக்கூடாது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலும், நடப்பாண்டு ஜனவரி மாதத்திலும் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்கள் முழுமைக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் உடனடியாக இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உழவர்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த பாட்டாளி மக்கள் கட்சி தயங்காது என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளாா்.
அதிமுகவில் கோஷ்டி பூசல் வெடித்தது… உறுப்பினர் அட்டைகள் ரோட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு…