’ஓரணியில் தமிழ்நாடு’ என்னும் உறுப்பினர் சேர்க்கைக்கான பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “திராவிட முன்னேற்றக் கழக அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வரலாற்றிலும் மிக முக்கியமான நாளாக, இந்த நாள் அமையப் போகிறது. ‘ஓரணியில் தமிழ்நாடு’என்ற மகத்தான முன்னெடுப்பை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்றைக்கு, தொடங்கி வைக்கிறேன். இன்று தொடங்கி, 45 நாட்கள் தொடர்ந்து இந்தப் பயணம் நடைபெறுகிறது. இன்று 38 வருவாய் மாவட்டக் கழகங்களிலும், அந்தந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் சேர்ந்து, எனது இந்தச் செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் இன்றைக்கு அவரவர் பகுதிகளில் ஊடகத் தோழர்களையும், பத்திரிகை நண்பர்களையும் சந்திக்க இருக்கிறார்கள்.
நாளை, தமிழ்நாட்டில் இருக்கும் 76 மாவட்டக் கழகங்களிலும் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, ஜூலை 3 முதல், தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க இருக்கிறோம். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் அனைவரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் இருக்கும் வீடுகளுக்கு நேரில் செல்ல இருக்கிறார்கள்.இதற்காக, கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், தொகுதிக்கு ஒருவர் என்று 234 நபர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. பயிற்சி பெற்ற அந்த 234 நபர்களும் தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இருக்கும் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்களுக்கு (BDA) பயிற்சி தந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க, மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டுவதுதான் இதன் அடிப்படையும், முதன்மையான நோக்கமும், தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதற்கான முயற்சிதான் இது.

ஒன்றிய பா.ஜ.க. அரசால் நம்முடைய தமிழும், தமிழ்நாடும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்று விளக்கத் தேவையில்லை. சுருக்கமாகத் தலைப்புச் செய்திகளை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். அரசியல், பண்பாடு, மொழி, பொருளாதாரம் என்று அனைத்து வகையிலும் நமக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளைச் சொல்ல வேண்டும் என்றால், அனைத்திலும் வளர்ந்த தமிழ்நாட்டை, ஒன்றிய அரசு பல்வேறு வழிகளில் புறக்கணிக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து வசூலிக்கப்படும் வரி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தரப்படுவது இல்லை. தமிழ்நாட்டின் நிதி உரிமைகள் ஜி.எஸ்.டி. கொள்கை மூலமாக பறிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி கொடுப்பதில்லை. தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்கள் இல்லை.
பள்ளிக் கல்விக்கான நிதி மறுக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசுதான் நிதி ஒதுக்கி நிறைவேற்றி வருகிறது. நீட் தேர்வு மூலமாக அடித்தட்டு மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு சிதைக்கப்படுகிறது. தேசியக் கல்விக் கொள்கை, இந்தித் திணிப்புக் கொள்கையாக மட்டுமே இருக்கிறது. தமிழுக்கு வெறும் 113 கோடியும், சமஸ்கிருதத்திற்கு 2,532 கோடியும் ஒதுக்கி இருக்கிறார்கள். தமிழர்களின் வரலாற்றுப் பெருமையைச் சொல்லும் கீழடி அறிக்கையைத் திட்டமிட்டு மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் நாம் தொடர்ந்து பேசுவதால், தொகுதி மறுவரையறை என்ற பெயரில், தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரு சிலவற்றை மட்டும்தான் சொல்லியிருக்கிறேன். இவை எல்லாம் வெறும் அரசியல் விமர்சனங்கள் மட்டுமில்லை; தமிழ்நாட்டின் உரிமை சார்ந்தவை. இவை எல்லாம் அரசியல் கட்சிகளால் மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களாலும் எதிர்க்கப்பட வேண்டும். அதற்காகத்தான், தமிழ்நாட்டில் இருக்கும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் அனைத்து வீடுகளுக்கும் சென்று, மக்கள் அனைவரையும் சந்திக்கப் போகிறோம். அப்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய விரும்புவோர் தங்களை இணைத்துக் கொள்ளலாம். தி.மு.க.வில் சேர ஆர்வம் உள்ளோர் செயலி மற்றும் நேரடிப் படிவம் மூலம் பதிவு செய்யப்படுவார்கள். மேலோட்டமாகப் பார்த்தால், தி.மு.க. தனக்கான உறுப்பினர்களைச் சேர்ப்பதாக உங்களில் சிலர் நினைக்கலாம். ஆனால், உண்மையான நோக்கம் என்பது கட்சி எல்லைகளைத் தாண்டி, தமிழ்நாட்டின் நலனுக்கானது.
தமிழ்நாடு ஒன்றுபட்டு நிற்கும்போது, எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது என்று காட்டியாக வேண்டும். பா.ஜ.க.வின் அரசியல் படையெடுப்பை பண்பாட்டு படையெடுப்பை தமிழ்நாடு மீது தொடுக்கப்பட்டிருக்கும் பொருளாதாரப் போரை எதிர்கொள்ள, நெஞ்சுரம் உள்ள அரசியல் சக்தி தேவை. அதை உருவாக்கத் தான் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரையை இயக்கமாகத் தொடங்கி இருக்கிறோம் என்பதை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தி.மு.க. தேர்தலுக்குத் தயாராகிவிட்டது இப்போது இல்லை, நாங்கள் தயாராகி வெகு நாட்களாவிட்டது.
திருப்புவனம் இளைஞா் வழக்கில் தவறு செய்தார்கள் என்று தெரிந்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது செய்துவிட்டோம். இன்றைக்குக்கூட மேலதிகாரியின் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
எதிர்க்கட்சியில் உள்ள குடும்பங்களைக்கூட சந்திக்கப்போகிறோம். நிச்சயமாக சொல்லப் போகிறோம். விருப்பம் உள்ளவர்களைச் சேர்க்கப் போகிறோம். கட்டாயப்படுத்திச் சேர்க்கப் போவதில்லை. சேர்ந்தே தீருங்கள் என்று சொல்ல மாட்டோம். அவ்வாறு சொன்னாலும் சேர மாட்டார்கள். அதனால் அவர்கள் விருப்பம் இருந்தால் சேர்ப்போம்.
எதிர்க்கட்சித் தலைவர் மக்களைச் சந்திக்கும் பயணத்தை 7-ஆம் தேதியிலிருந்து தொடங்கப் போகிறாரே என்ற கேள்விக்கு, “அவர் இப்போதுதான் மக்களை சந்திக்கப் போகிறார். நாங்கள் மக்களுடனேயே இருக்கிறோம்.
மேலும், எடப்பாடி பழனிசாமி அவர்களின் வீட்டிற்குச் செல்வீர்களா ? என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், “அது அங்கிருக்கக்கூடிய சூழ்நிலையைப் பொறுத்திருக்கிறது. பொறுப்பு ஒவ்வொருவரிடமும் ஒப்படைத்திருக்கிறோம். அவர்கள் சூழ்நிலைக்கேற்றவாறு செல்வார்கள். நான் அந்தப் பகுதியில் இருந்தால் நிச்சயம் செல்வேன்.” என்றார்.
2026-இல் சட்டப் பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் நிச்சயம் வெற்றி பெறுவோம். திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் எதுவும் இணையவில்லை. வந்தால் சொல்லுங்கள் பார்ப்போம். திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளது.