கோவை அருகே பெரியார் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு
கோவை அருகே பெரியார் சிலை மீது சாணி ஊற்றி அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வடசித்தூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி பெரியார் நினைவு சமத்துவபுரம். இப்பகுதியில் ஒரு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை பாதுகாப்பு காரணங்களுக்காக கூண்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியாரின் 145 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் இந்த பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் பெரியார் சிலை மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றி அவமரியாதை செய்துள்ளார். பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு இருப்பதை இன்று காலையில் அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெகமம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் உதவியுடன் காவல் துறையினர் மாட்டு சாணத்தை தண்ணீர் விட்டு சுத்தம் செய்தனர். மாட்டு சாணத்தை பெரியார் சிலை மீது வீசிய நபர்கள் குறித்து நெகமம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சனாதனம் குறித்த சர்ச்சைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் பெரியார் சிலையை அவமதித்தார்களா? அல்லது வேறு யாரேனும் வேறு காரணங்களுக்கான அவமதித்தார்களா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் சிலை அவமதிப்பூ செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.