கரூர் பரப்புரை கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றடைந்தாா்.
செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற நடிகர் விஜய் தலைமையிலான பரப்புரை கூட்டத்தின் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில், தவெக (தமிழக வெற்றி கழகம்) கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த டிசம்பர் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தவெக முக்கிய நிர்வாகிகளான பஸ்ஸி ஆனந்த், ஆதவ் அரஜூனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக கட்சித் தலைவர் விஜயிடம் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேரில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக நடிகர் விஜய் சென்னையிலிருந்து இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தாா்.


