குவைத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடல்கள் கொச்சியில் இருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. கொச்சி கொண்டுவரப்பட்ட உடல்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உடல் கருகியும், மூச்சு திணறியும் 7 தமிழர்கள் உட்பட 50 பேர் பலியாகினர்.
உயிரிழந்தோரின் உடல்கள் ராணுவ விமான மூலம் கேரள மாநிலம் கொச்சியை வந்தடைந்தது. டெல்லி கொண்டு செல்லப்பட உள்ள சடலங்களைத் தவிர மற்ற சடலங்கலுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாட்டை சேர்ந்த கருப்பண்ணன் ராமு, சின்னதுரை, முகமது ஷெரீப், புனாப் ரிச்சர்ட் ராய், வீராசாமி மாரியப்பன், எபமேசன் ராஜூ, கோவிந்தன் சிவசங்கர் ஆகியோர் உடல்கள் கொச்சியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆம்புலன்ஸில் தலா இரு ஓட்டுநர், ஒரு காவலர் பாதுகாப்புடன் உடல்கள் கொண்டு செல்லப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு அயலக நலவாரியம் மூலம் அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனக் கூறிய அமைச்சர் மஸ்தான் காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கும் உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கேரளாவை சேர்ந்த 23 பேரின் உடல்களும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவரது உடல் கொச்சியில் இருந்து விமான மூலமே ஹைதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.