டாஸ்மாக்கின் இலக்கு அரசுக்கு சம்பாதித்து கொடுப்பது அல்ல- அமைச்சர் முத்துசாமி
தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுத்து வருகிறோம் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் மாநகராட்சி பகுதியில் 160 கோடி மதிப்பில், சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்த சு.முத்துசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கீழ்பவானி கால்வாய் சீரமைப்பில் இரு தரப்பு விவசாயிகளும் சமாதான செல்ல வேண்டும் என்பதே அரசின் நோக்கம். எந்த தரப்பிற்கும் நாங்கள் ஆதரவாக இல்லை. இதில் சட்டத்தை மீறி யார் செயல்பட்டாலும் அது தவறு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராயத்தை தடுக்க முதல்வர் ஆலோசனைகள் வழங்கி உள்ளார். அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 500 கடைகளை முடுவதற்காக நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். டாஸ்மாக் கடைகளில் தவறு ஏதும் நடக்கவில்லை. டாஸ்மாக் மூலம் அரசுக்கு அதிக வருமானம் கிடைப்பதற்காக இலக்கு நிர்ணயப்பதில்லை. குடிமகன்கள் கள்ளச்சாராயத்தின் பக்கம் சென்று விட கூடாது என்பதற்காக தான் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. எனினும், தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை குறைய வேண்டும். டாஸ்மாக்கில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து சரி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.