கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், “காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிமை இல்லை” எனத் தெரிவித்த கருத்துக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாகவும் பேசும் டி.கே.சிவக்குமார் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் வெகுவிரைவில் தாக்கல் செய்து, அனுமதி பெற்று மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்டுவோம் என்றும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். எந்தத் தேவையும் இல்லாமல் கட்டப்படும் மேகதாது அணையால் பாதிக்கப்படும் தமிழ்நாட்டிற்கு அத்திட்டத்தை எதிர்க்க உரிமையில்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.

கர்நாடக மாநிலம் கொள்ளேகால் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார்,‘‘ தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 177 டி.எம்.சி தண்ணீரை காவிரியில் வழங்க வேண்டும் என்பது தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாகும். அதைக் கடந்து மேகதாது அணை கட்டும் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்று உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மேகதாது அணைக்கான புதிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது. அதை விரைவில் மத்திய அரசிடம் தாக்கல் செய்து, அனுமதி கிடைத்தவுடன் புதிய அணைக்கு அடிக்கல் நாட்டப்படும். அணை கட்டுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப் பட்டு விட்டன’’ என்று கூறியிருக்கிறார். இது மேகதாது அணை சிக்கலை திசை திருப்பும் செயலாகும்.
காவிரி ஆறு என்பது காவிரி பாசனப் பகுதி உள்பட மொத்தம் 14 மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும், சென்னை உள்ளிட்ட 30 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் 14 மாவட்டங்களின் வேளாண்மையும், 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் எனும் நிலையில் அதை எதிர்க்கும் முழு உரிமையும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு தான் உள்ளது. இன்னும் கேட்டால் கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்று காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது; அதை உச்சநீதிமன்றமும் பலமுறை உறுதி செய்துள்ளது.
மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருப்பதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறுவது அப்பட்டமான பொய் ஆகும். இது தொடர்பான வழக்கில் கடந்த நவம்பர் 13ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மேகதாது அணை தொடர்பான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடை விதிக்க முடியாது என்று தான் கூறியதே தவிர, மேகதாது அணை திட்டத்தை தமிழகம் எதிர்க்க கூடாது என்று கூறவே இல்லை. இன்னும் கேட்டால், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கப்படும் போது, தமிழ்நாடு அரசு அதன் எதிர்ப்பை பதிவு செய்யலாம்; அதையும் கருத்தில் கொண்டு தான் முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த உண்மைகளை மறைத்து விட்டு கர்நாடகம் பொய் பரப்புரை செய்வதை ஏற்க முடியாது.

மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை வாரியத்தில் கூட விவாதிக்கக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். ஏனென்றால், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை குறித்த கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு பெறவே கூடாது என்பது தான் காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சம் ஆகும். 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய மத்திய நீர்வள அமைச்சர் உமாபாரதி அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் இதை உறுதி செய்திருந்தார். மேலும், தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை குறித்த விண்ணப்பத்தை கர்நாடகம் தாக்கல் செய்தால் அது திருப்பி அனுப்பப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இது தான் மிகவும் சரியான நிலைப்பாடு.
ஆனால், அதை மீறி, மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு அனுமதி அளித்ததும், அதனடிப்படையில் கர்நாடக அரசு தயாரித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பியதும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செய்யப்பட்ட துரோகங்கள் ஆகும். பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியதன் அடிப்படையில் தான், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முந்தைய திமுக அரசு வழக்குத் தொடர்ந்தது. ஆனால், அந்த வழக்கை திமுக அரசு சரியாக நடத்தாததால் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையே தமக்கு சாதகமான தீர்ப்பாக எடுத்துக் கொண்டு மேகதாது அணையை கட்டி முடிக்க கர்நாடக காங்கிரஸ் அரசு சதி செய்கிறது.
70 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் மொத்தக் கொள்ளளவு 184.57 டி.எம்.சியாக அதிகரித்து விடும். அதன்பின், இப்போது கிடைக்கும் வெள்ள நீர் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. எனவே, இந்த சிக்கலில் கர்நாடக காங்கிரஸ் அரசின் சதித் திட்டங்களை விழிப்புடன் செயல்பட்டு தமிழக அரசு தடுக்க வேண்டும்.
அதற்காக, மேகதாது அணை குறித்து கர்நாடக அரசு புதிதாக தயாரித்திருக்கும் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள அமைச்சகம் பெற்றுக் கொள்ளக் கூடாது. அதுமட்டுமின்றி, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் அளித்த அனுமதியை ரத்து செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளாா்.
