புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை, உயர் நீதிமன்றம் கலைத்ததற்கு எதிராக அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2011ம் ஆண்டு அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், 2018ம் ஆண்டு வரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நீதிமன்றம், அந்த ஆணையத்தால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக அதைக் கலைத்து உத்தரவிட்டது.
கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. பலநூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி திறக்கப்பட்டது.
அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் 2011 டிசம்பரில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையத்தை கலைத்தும் , முகாந்திரம் இருந்தால் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும், கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் கடந்த 2018 ஆம் முதல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, தலைமைச் செயலக கட்டிடத்தால் மக்கள் வரிப்பணம் வீணடிக்க பட்டுள்ளது எனக் கூறி, நிலுவையில் உள்ள வழக்கில் தன்னையும் மனுதாராக இணைக்கக் கோரி ஜெயவர்த்தன் தாக்கல் செய்த மனுவை கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பான விசாரணை அறிக்கை தனக்கு இதுவரை கிடைக்கவில்லை. வழக்கை ரத்து செய்ததற்கு எதிரான தனது வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.