spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்2 - வான்சிறப்பு

2 – வான்சிறப்பு

-

- Advertisement -

திருக்குறள், 2 வான்சிறப்பு, கலைஞர் குறள் விளக்கம்

11. வானின் றுலகம் வழங்கி வருதலால்
      தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

கலைஞர் குறல் விளக்கம் – உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
      துப்பாய தூஉம் மழை.

கலைஞர் குறல் விளக்கம் – யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.

we-r-hiring

13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
      உள்நின் றுடற்றும் பசி.

கலைஞர் குறல் விளக்கம் – கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்துவிட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.

14. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
      வாரி வளங்குன்றிக் கால்.

கலைஞர் குறல் விளக்கம் – மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றிவிடும்.

15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
      எடுப்பதூஉம் எல்லாம் மழை.                    

கலைஞர் குறல் விளக்கம் – பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும். பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.

16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
      பசும்புல் தலைகாண் பரிது.

கலைஞர் குறல் விளக்கம் – விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.

17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
      தான்நல்கா தாகி விடின்.

கலைஞர் குறல் விளக்கம் – ஆவியான கடல்நீர் மேகமாசி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால் தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.

18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
      வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

கலைஞர் குறல் விளக்கம் – வானமே பொய்த்து விடும்போது, அதன் பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?

19. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
      வானம் வழங்கா தெனின்.

கலைஞர் குறல் விளக்கம் – இப்பேருலகில் மழை பொய்த்துவிடுமானால் அது. பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.

20. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
      வானின் றமையா தொழுக்கு.

கலைஞர் குறல் விளக்கம் – உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

MUST READ