அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்களே மருத்துவம் அளிக்கும் அவலம்: மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்டு காயத்துடன் வந்த நோயாளி ஒருவருக்கு அங்கு பணியாற்றும் துப்புரவுப் பணியாளர் ஒருவரே மருத்துவம் அளித்த காட்சி காணொலியாக வலம் வருவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் எத்தகைய அவல நிலையில் உள்ளன என்பதற்கு இந்த காணொலி தான் சான்று ஆகும்.
காயமடைந்த நோயாளிக்கு தூய்மைப் பணியாளர் மருத்துவம் அளிக்கவில்லை; ஏற்கனவே போடப்பட்ட கட்டை மட்டும் தான் பிரித்தார் என மருத்துவமனை தரப்பில் அளித்துள்ள விளக்கம் அபத்தமானது. நோயாளிகளூக்கு கட்டை பிரிப்பது தூய்மைப் பணியாளரின் வேலை அல்ல. அந்தப் பணியை பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர் தான் மேற்கொள்ள வேண்டும். தூய்மைப் பணிகளை மேற்கொண்ட பணியாளர் ஒருவர், அப்படியே நோயாளிக்கு மருத்துவம் அளித்தால் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்துகள் உள்ளன. இவற்றை அறிந்திருந்தும் ஒரு நோயாளிக்கு தூய்மைப்பணியாளர் மூலம் சிகிச்சையளிக்கச் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுவது தான் சிக்கலுக்குக் காரணம் ஆகும். மருத்துவப் பணியாளர்களை போதிய அளவில் நியமிக்க வேண்டிய தமிழக அரசு, அதைச் செய்யாமல் வீண் விளம்பரங்களிலும், பொய்ப்பரப்புரைகளிலும் மட்டும் தான் ஈடுபட்டு வருகிறது.
ஒரு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக இருந்த தமிழக மருத்துவத்துறை இப்போது சீரழிவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். உயிர்க்காக்கும் துறையில் அலட்சியமாக செயல்படுவதை விடுத்து மருத்துவத் துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளாா்.
அமித்ஷாவை சீண்டிய அண்ணாமலை! திமுக அணியிலிருந்து விலகும் மதிமுக?