நீலகிரி மாவட்ட அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு உள்பட 8 பேர் மீது கோத்தகிரி காவல்துறையினர் முத்திரை தாள் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.கோத்தகிரியை சேர்ந்த சாந்தி ராமு என்பவர் குன்னூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவாா். அதிமுகாவை சேர்ந்த இவர் தற்போது நீலகிரி மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரும் குடும்பத்தை சேர்ந்த ராஜன், ராஜ்குமார், ராஜூ, லிங்கியம்மாள் விபு, திலீப், ரஞ்சித் ஆகியோர் கடந்த 2012 ஆம் ஆண்டு 50 ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாள்களை உதகை சார்ந்த கோசி என்ற முத்திரை தாள் விற்பனையாளரிடம் 8/2/2012, 22/02/2012 தேதியிட்டு வாங்கியுள்ளனர். அதில் ஒரு முத்திரை தாளை 2006-ல் வாங்கியது போல திருத்தியதுடன் மற்றொரு முத்திரைத்தாளை 2010 ஆம் ஆண்டு வாங்கியது போல தேதி திருத்தம் செய்து சொத்துக்களை பத்திர பதிவு செய்துள்ளதாக கோத்தகிரி அருகே உள்ள கொணவக் கரை சார்ந்த திலக் மற்றும் கண்ணன் ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கண்காணிப்பாளர் நிஷா கோத்தகிரி காவல் துறையினரை விசாரிக்குமாறு உத்தரவிட்டார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 2012 ஆம் ஆண்டு வாங்கிய முத்திரை தாள்களில் தேதி மற்றும் வருடங்களை மாற்றி பத்திரப்பதிவு செய்தது தெரிய வந்தது. அது குறித்து மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்திலும் விசாரணை நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 13-ஆம் தேதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு மற்றும் அவரது குடும்பத்தைச் சார்ந்த ஏழு பேர் மீது போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் முதற்கட்டமாக நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.