1211. காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து
கலைஞர் குறல் விளக்கம் – வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?

1212. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன்
கலைஞர் குறல் விளக்கம் – நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.
1213. நனவினான் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்
கலைஞர் குறல் விளக்கம் – நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.
1214. கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு
கலைஞர் குறல் விளக்கம் – நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.
1215. நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது
கலைஞர் குறல் விளக்கம் – காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!
1216. நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
காதலர் நீங்கிலர் மன்
கலைஞர் குறல் விளக்கம் – நனவு மட்டும் திடீரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.
1217. நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது
கலைஞர் குறல் விளக்கம் – நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?
1218. துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து
கலைஞர் குறல் விளக்கம் – தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர். விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.
1219. நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர்க் காணா தவர்
கலைஞர் குறல் விளக்கம் – கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.
1220. நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
காணார்கொல் இவ்வூ ரவர்
கலைஞர் குறல் விளக்கம் – என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே. இந்த ஊரார், பிரிந்து சென்ற நமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?