சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஶ்ரீவஸ்தவா பதவியேற்றார். கிண்டி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஶ்ரீராம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.ஶ்ரீவஸ்தவா சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதைதொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமை நீதிபதியாக மனீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவாவிற்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் எம்.எம்.ஶ்ரீவஸ்தவா, கடந்த 1964 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டீஸ்கர் மாநிலம்(அப்போதைய ம.பி) பிலாஸ்பூரில் பிறந்தார். பி.எஸ்.சி, பட்ட படிப்பை முடித்த ஸ்ரீவஸ்தவா, எல்.எல்.பி படிப்பை தங்க பதக்கத்துடன் முடித்தார். தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட ஸ்ரீவஸ்தவா, 2005 ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக உயர்வு பெற்றார்.
தொடர்ந்து 2009ம் ஆண்டு சட்டீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் 2021 ஆம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார், தொடர்ந்து ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஸ்ரீவஸ்தவா,கடந்த ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதிவேற்ற ஸ்ரீ வஸ்தவா சுதந்திரத்திற்கு பின்பான உயர்நீதிமன்றத்தின் 36 வது தலைமை நீதிபதி ஆவார்.
இந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு அரசின் சார்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, சபாநாயகர் அப்பாவு, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் சி.வி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பதவியேற்பு விழாவிற்கு வந்த தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் அவரது குடும்பத்தினரை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோர் வரவேற்றனர்.