மக்கள்நலப் பணிகளை மேற்கொள்வதில் திமுக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளாா்.
இது குறித்து மேலும் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களையும், அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் கூட திமுக அரசு செயல்படுத்தாமல் குறட்டை விட்டு உறங்கும்; பாட்டாளி மக்கள் கட்சி தட்டி எழுப்பினால் தான் விழித்துக் கொண்டு செயல்பட முயலும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள்நலப் பணிகளை மேற்கொள்வதில் திமுக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்ததைக் கண்டித்து கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி நான் அறிக்கை வெளியிட்ட நிலையில், அதற்கான அனுமதியை திரும்பப் பெறும்படி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு அறிவுறுத்தப்படும் என்று அன்று மாலையே தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அதன்பின் 15 நாள்களாகியும் அனுமதி ரத்து செய்யப்படாததை சுட்டிக்காட்டியும், கண்டித்தும் செப்டம்பர் 7-ஆம் தேதி மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டேன். அதன்பிறகு தான் கடந்த 10-ஆம் தேதி ஹைட்ரோ கிணறுகள் அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.
அதேபோல், கடந்த மார்ச் 15-ஆம் நாள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், “முந்திரியின் பரப்பினை உயர்த்தி, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரிசார் தொழில்நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கவும், முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கவும் ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்திரி வாரியம் (Tamil Nadu Cashew Board) ஏற்படுத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்பின் 6 மாதங்களாகியும் அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படாதது ஏன்? என்று கடந்த 10-ஆம் தேதி பண்ருட்டியில் நடைபெற்ற முந்திரி விவசாயிகளுடனான சந்திப்பின் போது நான் வினா எழுப்பியிருந்தேன்.
அதைத் தொடர்ந்து தான் தமிழ்நாடு அரசு விழித்துக் கொண்டு முந்திரி வாரியம் அமைப்பதற்கான அரசாணையை நேற்று பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கான அறிவிப்புகளை உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும். ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அறிவிப்புகளை மட்டும் தான் வெளியிடும். அத்துடன் கடமை முடிந்து விட்டதாகக் கருதி கும்பகர்ணன் உறக்கத்திற்கு சென்று விடும். அதன்பின் அதை பாட்டாளி மக்கள் கட்சி சுட்டிக்காட்டி தட்டி எழுப்பினால் தான் விழித்துக் கொண்டு செயல்படும். இதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
“சண்டி மாடு தானாக ஓடாது… தார்க்குச்சியால் குத்தினால் தான் ஓடும்” என்று கிராமப்புறங்களில் கூறுவார்கள். அதைப் போலத் தான் செயல்படாத சண்டி மாடாக திராவிட மாடல் அரசு இருக்கிறது; அதை செயல்பட வைக்கும் தார்க்குச்சியாக பாட்டாளி மக்கள் கட்சி திகழ்கிறது. கிராமங்களில் செயல்படாத சண்டி மாடுகளை ஒதுக்கி வைப்பதைப் போல திராவிட மாடல் அரசுக்கும் வரும் தேர்தலில் மக்கள் முடிவுரை எழுதுவார்கள். அதன்பின் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் ஆட்சியில் தமிழ்நாடு மறுமலர்ச்சி பெறும்; மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.