
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ மாற்றக் கோரிக்கை வைத்தது பாஜக தான் என அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்டபர்கள் சார்பில் 3 ரிட் மனுக்கள், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பாஜக தாக்கல் செய்த மனு என மொத்தம் 5 மனுக்களையும் நீதிபதிகள் மகேஸ்வரி, ஆச்சாரியா அமர்வு விசாரித்தது. ஏற்கனவே விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் வந்த பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சியோ, ஆளும் கட்சியோ அல்லது எந்தவொரு அரசியல் கட்சியோ, தேர்தல் பரப்புரைக்கு வந்த தவெகவுக்வோ சம்பந்தப்பட்ட வழக்கு என்று மூடி மறைக்க கூடாது. இது 41 உயிர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு.
அதனால் நாங்கள் நேரடியாக 41 உயிர்கள் தொடர்புடைய வழக்கு என்பதால் தான் ஒரு நபர் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என கூறினோம். சிபிஐ விசரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க உத்தரவிட்டதையும் வரவேற்கிறோம். பாஜகவின் 2 தொண்டர்கள் தனிப்பட்ட முறையில் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை வைத்தது பாஜக தான். கரூர் விவகாரத்தில் தொடர்புடைய எந்த அதிகாரியாக இருந்தாலும் சரி எந்த அரசியல் பிரமுகராக இருந்தாலும் சரி தண்டிக்கப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.