தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
தெருநாய்கள் பொதுமக்களை கடிக்காமல் தடுக்கவும், அதனால் பரவும் ரேபிஸ் நோய்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், 138 கால்நடை மருத்துவமனைகள் மூலம் கருத்தடை செய்யப்படுகிறது.
இதற்காக கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதலாக 88 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் மட்டும் 5 கருத்தடை மையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் 10 மையங்களை கூடுதலாக உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்ற 25 மாநகராட்சிகளில் 86 கருத்தடை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. டவுன் பஞ்சாயத்துகளில் 96 மையங்கள் செயல்படுகின்றன. இந்த கருத்தடை திட்டத்திற்கு 450 கால்நடை மருத்துவர்களுக்கு கால்நடை பல்கலைக்கழகங்கள் மூலம் 15 நாள் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர 500 உதவி மருத்துவர்களுக்கும் 500 உதவியாளர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தனியார் கால்நடை மருத்துவமனைகளும், மருத்துவர்களும் விருப்பத்தின் அடிப்படையில் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். 450 நாய் பிடிப்பவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. நாய்களுக்கு 72 காப்பகங்கள் உருவாக்க ஜூலை மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது வரை 4.77 லட்சம் ரேபிஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட நாய்கள் உள்ளிட்ட விலங்குகளின் நலனுக்காக 2022- 23 நிதி ஆண்டு முதல் 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நவம்பர் 3 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இரண்டே நிமிடத்தில் உங்களின் இதய ஆரோக்கியத்தை தெரிந்துக் கொள்ளலாம்….


