ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் பெண் ஒருவர் திடீரென மேடையேறி மைக்கைப் பிடித்து பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அருகே திருநின்றவூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவள்ளூர் மத்திய மாவட்ட மகளிர் அணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா். இதில் சிறப்பு விருந்தினராக நிர்வாகி ராஜ்மோகன் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் தன்னை தாக்கியதாக குற்றஞ்சாட்டி மேடைக்கு அருகில் வந்து பேச முயன்றார்.
இதையடுத்து ராஜ்மோகன், அந்த பெண் தவெக நிர்வாகி என்றும், அவரை திமுகவினா் தாக்கியதாக குற்றம் சாட்டினார். இதனால் அக்கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த பெண் திடீரென பதற்றமடைந்த நிலையில், மேடையில் ஏறி தன்னை ஐடி ஊழியர் மற்றும் கோல்டு மெடலிஸ்ட் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டாா். மேலும் “எனக்கு நீதி வேண்டும்” என ஆங்கிலத்தில் கோரிக்கை வைத்தார்.
பின்னர் காவல்துறையினர் அவரை பாதுகாப்புடன் அங்கிருந்து அந்த பெண்ணை அழைத்துச் சென்றனர். உறவினர்கள், அந்த பெண்ணுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் கூட்டம் விரைவாக முடிக்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்மோகன், விஜய் மீது நயினார் நகேந்திரன் தெரிவித்த கருத்துகள் அரசியலில் ஏற்றுக்கொள்ள முடியாதவை என விமர்சித்தார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் தவெக கொள்கை இல்லாத கட்சி என கூறியது நகைச்சுவையாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) உடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு, “அதிகாரப் பகிர்வு குறித்து தவெக தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருவதாகவும், கூட்டணி தொடர்பான முடிவுகள் தலைவர் மற்றும் பொதுக்குழு ஆலோசனையின் பேரில்தான் எடுக்கப்படும் என்றும் அதே நேரத்தில், தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து அக்கட்சியே முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.


