கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அவுரியூர் கிராமத்தில், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், புகாரை விசாரிக்காமல் காலதாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவுரியூர் கிராமத்தைச் சேர்ந்த கணவனை இழந்த அஞ்சலையின் மகள் அபிநயா (21) என்பவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவருக்கும் 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் மட்டுமே குடும்பம் நடத்தப்பட்ட நிலையில், பின்னர் ரஞ்சித் குமார் சென்னையில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும், மனைவியுடன் வாழாமல் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையடுத்து, தங்கள் மகளை மீண்டும் கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் அல்லது திருமணத்தின் போது வழங்கப்பட்ட வரதட்சணை 10 பவுன் நகை உள்ளிட்ட பொருட்களை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரி, கடந்த பிப்ரவரி மாதம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், புகார் அளிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், தினமும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், விசாரணை குறித்து கேள்வி எழுப்பும் போது காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் ஒருமையில் பேசுவதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு தங்கள் மகளுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேறு பெண்ணுடன் திருமணம்…மன்டபத்துக்கே சென்று தடுத்து நிறுத்திய காதலியால் பரபரப்பு
