பெண் போலீசுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்- இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை
செங்கல்பட்டு அருகே பெண் காவலருடன் ஏற்பட்ட கள்ளக்காதலில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த தர்காஸ் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (33). இவருக்கு திருமணம் ஆகாத நிலையில். தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜேசிபி இயந்திரம் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு 10-மணியளவில் தனது நண்பரை காண இருசக்கர வாகனத்தில் கொண்டமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த 3-மர்ம நபர்கள், மனோகரனை அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளனர்.
தொடர்ந்து இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு மனோகரன் தப்பி ஓடி சென்று பள்ளிக்கூட தெருவில் உள்ள ஒரு வீட்டில் பின்பக்கமாக சென்று பதுங்கி உள்ளார். அப்போது பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் மனோகரனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மனோகரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் போலீசார், மனோகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கூடுவாஞ்சேரியில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வரும் சங்கீதா என்ற பெண் காவலர் ஒருவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டியால் மனோகரன் கொலை செய்யப்பட்டாரா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.