ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேலான பணத்தை இழந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள மேலப்புதுவயலைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்ற கார்த்தி(23). கீரனூர் அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது கைப்பேசி மூலம் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை பணம் செலுத்தி விளையாடி வந்ததாகத் தெரிகிறது. இதனால், சுமார் மூன்று லட்சத்திற்கு மேலான பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது சம்பள பணம், வீட்டில் பொய் சொல்லி வாங்கிய பணம், ஆன்லைன் கடன் மற்றும் வங்கி கடன் உள்ளிட்டவைகள் மூலம் பெற்ற பணத்தை அனைத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் கார்த்தி இழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மனம் உடைந்த கார்த்தி நேற்றிரவு வீட்டில் விஷம் அருந்தி மயக்கமானார். இதையடுத்து வீட்டிலிருந்தவர்கள் அவரை மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் பூச்சிக்கொல்லி மருந்தை குடிப்பதற்கு முன்அதாக கார்த்தி எழுதிய கடிதத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.