காவிரி விவகாரம்- மத்திய அமைச்சரை சந்தித்து நச்சுனு ஒரு கேள்வி கேட்டேன்: துரைமுருகன்
காவிரி தொடர்பாக தமிழகம் சொல்லும் எந்த கோரிக்கையையும், கர்நாடகம் இதுவரை கேட்டதே இல்லை என அமைச்சர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லி சென்று திரும்பிய பின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “ஒன்றிய அமைச்சரிடம் நான் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்டேன், கர்நாடகா பல அணைகளில் தண்ணீரை தேக்கி வைத்துள்ளது என்று நாங்கள் சொல்கிறோம், இல்லை என்று கர்நாடகா சொல்கிறது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இருக்கிறதா?இல்லையா? என கண்டுபிடித்து சொல்லும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் , காவிரி ஒழுங்காற்று குழுவிற்குமே உள்ளது. அவர்கள் தங்களது ஆட்கள் மூலம் ஆய்வு செய்து 13-ம் தேதி விநாடிக்கு 12, 500 கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கலாம் என்று கூறினார்கள். ஆனால் காவிரி ஒழுங்காற்று குழு 5 ஆயிரம் கன அடியை கொடுக்க வேண்டும் சொல்கிறது.
எனவேதான் காவிரி ஒழுங்காற்று குழு நேர்மையாக நடக்கிறதா? அல்லது கர்நாடகாவிற்கு அனுசரணையாக நடக்கிறதா என்று மத்திய அமைச்சரிடம் கேட்டேன். ஏனென்றால் இதை கேட்க வேண்டியது ஒன்றிய அரசின் வேலை. கர்நாடகாவிடம் அது குறித்து கேட்கமுடியவில்லை என்றால் ஒன்றிய அமைச்சர் எதற்கு? காவிரி மேலாண்மை ஆணைய தலைவரிடமும் பேசினேன் , மாற்றி மாற்றி ஏன் உத்தரவு போடுகிறீர்கள் என்று கேட்டேன். ஒழுங்காற்று குழு அதிகாரி ஒருவரே சொல்கிறார் கர்நாடகத்திற்கு குடிக்க தண்ணீர் தேவைப்படுகிறது என்று தமிழகத்திற்கும்தான் காவிரி நீர் குடிக்க தேவைப்படுகிறது , நாங்கள் மட்டும் வாரிக் கொட்டவா காவிரியில் தண்ணீரை கேட்கிறோம். குடிக்கத்தான் கேட்கிறோம் . தமிழகத்திலும் பல இடங்களிலும் காவிரி தண்ணீரைத்தான் குடிக்கிறோம். காவிரி வழக்கில் நாளை உச்சநீதிமன்றத்தில் ஆஜராக உள்ள வழக்கறிஞரை இன்று சந்தித்து பேசியுள்ளேன், நாளை முன்வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து பேசினோம்.

காவிரி தொடர்பாக தமிழகம் சொல்லும் எந்த கோரிக்கையையும், கர்நாடகம் இதுவரை கேட்டதே இல்லை. தமிழகத்தின் கோரிக்கைக்கு ஒரு நாளும் , ஒரு துரும்பும், கர்நாடக அசைந்து கொடுத்ததே இல்லை. காவிரி தொடர்பாக நாம் பெற்ற அனைத்து உரிமையும் உச்சநீதிமன்றம் மூலமே பெறப்பட்டது, இனி வரும் காலத்திலும் நீதிமன்றம் மூலமே உரிமையை பெறுவோம்” என்றார்.