லஞ்சம் பெற்றுக் கொண்டு, குழந்தைகள் நல குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், பெண் வழக்கறிஞருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் 13 வயது மகன் அளித்த புகார் அடிப்படையில் தாய் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி தாய் மனு அளித்துள்ளார்.
போக்சோ வழக்குப் பதிவு செய்வதற்காக சிறுவனின் தந்தையிடம் இருந்து கூகுள் பே மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் குழந்தைகள் நல குழு உறுப்பினர் லஞ்சம் பெற்றதை புகார் குறித்து விசாரணை நடத்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளனர்
பாதிக்கப்பட்ட சிறுவனின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ரத்து செய்யக்கூடாது என காவல்துறை தெரிவித்துள்ளது.
குழந்தைகள் நல குழுவின் தவறான வழிகாட்டுதல் அடிப்படையில், முறையாக விசாரிக்காமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேல் விசாரணை நடத்தி நான்கு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.