அரசியல் பரபரப்புக்கு மத்தியில் அறிவாயத்தில் முதல்வரை நேரில் சந்நதித்து காடுவெட்டி குருவின் மகள் விருந்தாம்பிகை திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளாா்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காடுவெட்டி குருவின் மகள் விருந்தாம்பிகை, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தங்கள் ஆதரவை அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2019ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், இந்த தேர்தலிலும் அதே நிலைப்பாட்டைத் தொடர்கிறோம் என்றும் தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதும், வன்னியர் சமூகத்துக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதும் தங்களது ஆதரவுக்கான முக்கிய காரணங்கள் என கூறினார்.
மேலும், வன்னியர் சமூக நலனுக்காக திமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், முந்தைய ஆட்சிக்காலங்களில் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்குதல், இடஒதுக்கீட்டு போராளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், மணிமண்டபம் அமைத்தல் போன்ற பல முன்னேற்றங்களை சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஓட்டுக்காகவும், பணத்திற்காகவும் அரசியல் செய்கிறார் என்றும், வன்னியர் சமூக நலனுக்காக எந்த பயனும் அளிக்கவில்லை என்றும் கடுமையாக விமர்சித்தாா். அதேபோல், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியையும் குறிவைத்து, வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் அவர்கள் உண்மையான முயற்சி எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
பெரம்பூர் தொகுதி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த அரசியல் நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்ட அவர், சில முடிவுகள் ஓட்டுக்காக மட்டுமே எடுக்கப்பட்டவை என்றும் தெரிவித்தார். இந்த தேர்தலில் அன்புமணி ராமதாஸை தோற்கடிப்பதே தங்களது முதல் நோக்கம் என்றும், கிராமம் தோறும் சென்று அவரது அரசியல் செயல்பாடுகளை வெளிக்கொணரப்போவதாகவும் கூறினார்.
மேலும், தமது தந்தை காடுவெட்டி குருவுடன் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்த அவர், பாமக தலைமையின் தற்போதைய நிலைப்பாடுகள் ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும், ராமதாஸ் மீது தனிப்பட்ட மரியாதை இருப்பதாகவும், அவரை சந்திக்கும் வாய்ப்பு இருந்தால் சந்திப்போம் என்றும் கூறினார்.
இறுதியாக, வன்னியர் சமூக மக்களும், பாமக ஆதரவாளர்களில் ஒரு பகுதியும் தங்களது நிலைப்பாட்டை ஆதரித்து வருவதாகவும், திமுக நல்லாட்சி வழங்கி வருவதாக நம்பிக்கை தெரிவித்தார். சமூகநீதியை முன்னிறுத்தும் அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் திமுகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் விருந்தாம்பிகை உறுதியளித்தார்.
தவெக வேட்பாளர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
