சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதிகளுக்கு, இன்று மாலை முதல், மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள், புதிதாக இயக்கப்படுகின்றன.சென்னை விமான நிலைய பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பயணிகள், மற்றும் கிழக்குக் கடற்கரை சாலை அக்கரை பகுதி பயணிகள் வசதிக்காக, தமிழ்நாடு அரசின் மாநகரப் போக்குவரத்துக் கழகம், இந்த புதிய பேருந்துகளின் இயக்கத்தை இன்று மாலை 5 மணியில் இருந்து, தொடங்குகிறது.
சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும், விமான நிலையத்தில் இருந்து வெளியில் செல்லும் பயணிகள் வசதிக்காக, மாநகர பேருந்துகளை சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும். குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், பல்லாவரம்- துரைப்பாக்கம் சாலை வழியாக, ஓ எம் ஆர் சாலை, இ சி ஆர் சாலை போன்றவர்களுக்கு, பேருந்துகள் வசதிகள் தேவை என்று பயணிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பேருந்துகள் விமான நிலையத்தின் உள்பகுதிக்குள் வந்து நின்று, பயணிகளை ஏற்றி செல்வதற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள், இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதி கேட்டனர். இந்திய விமான நிலைய ஆணையமும், அதற்கு அனுமதி வழங்கியது.
இதை அடுத்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியில் இருந்து, சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையம், வருகை பகுதி டெர்மினல் 2 அருகில் இருந்து, இந்த மாநகர பேருந்துகள் புதிதாக செயல்பட தொடங்குகின்றன. சென்னை விமான நிலையம்- கிளாம்பாக்கம் இடையே பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மாநகர பேருந்து சென்று அடைகிறது. ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும், ஒரு பேருந்து இயக்கப்பட இருக்கிறது.
இதைப்போல் சென்னை விமான நிலையம்- அக்கரை இடையே, மற்றொரு மாநகர பேருந்து ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியில் இயக்கப்பட இருக்கிறது. இந்தப் பேருந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பல்லாவரம், பல்லாவரம் மேம்பாலம் வழியாக, கீழ்கட்டளை சந்திப்பு, ஈச்சங்காடு, பள்ளிக்கரணை சந்திப்பு, துரைப்பாக்கம், ஓஎம்ஆர் சாலை, இசிஆர் சாலை வழியாக அக்கரை செல்ல இருக்கிறது.
இந்த புதிய மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகளுக்கு மிகுந்த வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பேருந்துகள் இரவு பகல் என்று, 24 மணி நேரமும் இயக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
ரவி முகத்தில் கரி! கழட்டிவிட்ட துணை வேந்தர்கள்! ஊட்டி மீட்டிங் டோட்டல் டேமேஜ்!