நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கல்லூரி கல்வி இயக்குநரை குற்றவாளி என தீர்மானித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை என்று நிரூபிக்கும் வகையில், ஜூன் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கல்லூரி கல்வி இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆறு கல்லூரிகளில் காலியாக இருந்த 130 உதவி பேராசிரியர்கள், ஒரு நூலகர், ஒரு உடற்கல்வி இயக்குநர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறக்கட்டளை நிர்வாகி அறிவிப்பு வெளியிட்டு இருந்தாா். உதவி பேராசிரியர்கள் தேர்வு தொடர்பான அறிவிப்பை எதிர்த்த பொதுநல வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஆசிரியர்கள் இல்லாமல் கல்லூரி செயல்பட முடியாது. கல்லூரிகளின் கல்வி நடவடிக்கை முடங்கிவிடும். மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி, உதவி பேராசிரியர் தேர்வு நடவடிக்கைகளுக்கு அரசின் முன் அனுமதி தேவையில்லை எனவும் உத்தரவு பிறப்பித்து, வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் தகுதி பெற்ற 754 விண்ணப்பதாரர்களை நேர்முகத் தேர்வு செய்வதற்காக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் பிரதிநிதிகளை அனுப்பி வைக்காததை எதிர்த்து, பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இரு நிபுணர்களை அனுப்பி வைக்கும்படி பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதேபோல தேர்வு நடவடிக்கைகளை தொடரவும் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் 34 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறி, 126 பேரின் தேர்வுக்கு ஒப்புதல் வழங்க மறுத்தது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கல்லூரி கல்வி இயக்குநர் குற்றவாளி என தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
அதே சமயம் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை என்று நிரூபிக்கும் வகையில், ஜூன் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கல்லூரி கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்தார். அதேபோல பொதுநல வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது குறித்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தும் நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று மாலை முதல் மாநகர பேருந்துகள் சேவை தொடக்கம்