தென்காசியில் உள்ள ரேஷன் கடையில், தலை துண்டித்து வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தென்காசி மாவட்டம், காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த பட்டுராஜா என்பவர் கடந்த நவம்பர் மாதம் 17-ஆம் தேதி காசிமேஜர்புரம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கணேசன் ஆனந்த் உள்ளிட்ட 5 நபர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது ஜாமினில் வெளிவந்த அவர்களை கொலை செய்ய பட்டுராஜாவின் உறவினர்கள் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
இவர்கள் ஆனந்தின் சகோதரரான குத்தாலிங்கம் ( 35) என்பவரை நேற்று தென்காசி கீழப்புலியூரில் உள்ள ரேஷன் கடையில் வைத்து, தலையை துண்டித்து கொலை செய்தனர். தொடர்ந்து, குத்தாலிங்கத்தின் தலையை பட்டுராஜா கொலை செய்யப்பட்ட காசிமேஜர்புரம் பகுதிக்கு சுமார் 8 கிலோமீட்டர் தூரம் எடுத்து வந்து வைத்து விட்டு தப்பிவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி மற்றும் குற்றாலம் போலீசார் ராமசுப்பிரமணியன் (25) மற்றும் ஹரிஹரசுதன் (24) திருச்செந்தூர் பகுதியில் தலைமறைவாக இருந்த செண்பகம் (40) மற்றும் மணி ( 25) ஆகியோரையும் கைது செய்தனர்.