கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இளம்பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அந்தோணி மரியராபின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய அந்தோணி மரியராபின், அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று அந்தோணி மரியராபின் தனது நண்பரான கிரீஸ் சாமுவேல் குமார் என்பவரை அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு அவர்கள் இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணுக்குத் திட்டமிட்டு மயக்க மருந்து கொடுத்துள்ளனர். பின்னர், மயங்கிய நிலையில் இருந்த அந்தப் பெண்ணை இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும், இந்த அதிர்ச்சிசி கரமான செயலை அவர்கள் தங்களது செல்போனிலும் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். மயக்கம் தெளிந்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணிடம், இந்த விஷயம் குறித்து வெளியில் கூறினால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி இருவரும் தொடர் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், தைரியமாக கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், அந்தோணி மரியராபின் மற்றும் கிரீஸ் சாமுவேல் குமார் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கிரீஸ் சாமுவேல் குமாரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அந்தோணி மரியராபினைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
